Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

ஹைதராபாத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்திறங்கிய இளைஞரிடம் ரூ.28 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா என போலீஸார் விசாரணை

ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயிலில் பயணித்த ஆந்திராவைச் சேர்ந்த நபரிடமிருந்து கணக்கில் வராத 28 லட்சம் ரூபாயை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அது ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

முழு ஊரடங்கு காரணமாக, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் இணைந்து, ரயில் நிலையங்களில் சட்ட விரோதமாக, பிற மாநிலங்களிலிருந்து மது பாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா என தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர். அதன்படி நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அதிகாலை 5.30 மணியளவில் ஹைதராபாத்தில் இருந்து சென்ட்ரலுக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ஒன்று வந்தது. நடைமேடை எண் 3-ல் நின்ற அந்த ரயிலில் இருந்து இறங்கிய இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவருடைய வயிற்றுப் பகுதி மட்டும் பெரிதாகத் தெரிந்ததால், அவரது சட்டையை கழற்றி சோதித்தனர். அப்போது அவரது இடுப்பில் கட்டுக்கட்டாக ரூ.28 லட்சம் ரூபாய் நோட்டுகளை துணியால் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

போலீஸாரின் விசாரணையில் பிடிபட்டவர் ஆந்திரா மாநிலம், குண்டூரை சேர்ந்த கொனகண்டியா சந்திரசேகர் (21) என்பது தெரியவந்தது. மேலும், அவர் குண்டூரில் ஒரு நகைக்கடையில் வேலை செய்வதாகவும், சென்னையில் குமார் என்பவரிடம் இந்த பணத்தை கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தார். பணத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பிடிபட்ட பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். பிடிபட்ட இளைஞரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது ஹவாலா பணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x