Published : 28 Dec 2015 03:46 PM
Last Updated : 28 Dec 2015 03:46 PM

மருத்துவ மேற்படிப்புக்கான தேர்வை தமிழகத்திலும் நடத்த வைகோ வலியுறுத்தல்

மருத்துவ மேற்படிப்புக்கான தேர்வினை தமிழகத்திலும் நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''அகில இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 2-ம் தேதி நடக்குமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டிருந்தது. எனினும், சென்னை அம்பத்தூரில் நடக்கவிருந்த தேர்வினை ரத்து செய்யவில்லை என்று மருத்துவ கவுன்சில் கூறியது. அதை நம்பி ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தேர்வு மையத்துக்குச் சென்றனர். ஆனால், அங்கு தேர்வு ஏதும் நடத்தப்படவில்லை.

இந்த சூழலில், மருத்துவ மேற்படிப்புகளுக்கான தேர்வு மீண்டும் வரும் ஜனவரி 11-ம் தேதி நடக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தேர்வு சென்னையில் நடத்தப்படவில்லை. தமிழக தேர்வர்கள் டெல்லி, காஷ்மீர், மும்பை, புனே, மேகாலயா போன்ற மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ மேற்படிப்புக்காக தேர்வு எழுத காத்திருந்த 5 ஆயிரம் பேர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 50 சதவீத மருத்துவ மேற்படிப்பு இடங்கள் அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், அந்த இடங்களுக்கான தேர்வினை தமிழகத்தைச் சேர்ந்தோர் எழுத முடியாத நிலை ஏற்பட்டால், அவை அனைத்தும் மற்ற மாநிலத்தவர்களுக்கு வழங்கப்படும். இதனை மனதில் வைத்து தான் அகில இந்திய மருத்துவ கவுன்சில் தமிழகத்தில் தேர்வுகளை நடத்தவில்லை. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. எனவே, மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வை தமிழகத்தில் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x