

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளா நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா என்பது குறித்து நாளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
கரோனா வைரஸ் 2-வது அலை பரவியதையடுத்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்திவைத்தது. இதுபோலவே பல மாநிலங்களிலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தநிலையில் கரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து அண்மையில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. மாநில அரசுகள் தங்கள் விரிவான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அனுப்பிவைக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
பெரும்பாலான மாநிலங்கள் தங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் அனுப்பின.
இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு தொடர்பாக இறுதி முடிவை எட்ட, இன்று பிரதமர் மோடி கல்வித்துறை உயரதிகாரிகளுடன் காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், மாணவர்களின் உடல்நலன் கருதி நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
மாணவர்களின் உடல்நலன் மற்றும் எதிர்கால நன்மை கருதி பலகட்ட ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா என்பது குறித்து நாளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
ஏற்கெனவே, மாநிலத்தில் பிளஸ் 2 நடத்துவதை மத்திய அரசு சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக எடுக்கும் முடிவை ஒட்டி அறிவிப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நாளைய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.