Published : 01 Jun 2021 06:42 PM
Last Updated : 01 Jun 2021 06:42 PM

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வயிற்றில் ரூ.28 லட்சம் மறைத்து எடுத்துவந்த இளைஞர்: ஹவாலா பணமா?- போலீஸார் விசாரணை

வயிற்றில் மறைத்து எடுத்து வரப்பட்ட பணம்.

சென்னை

ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்த ரயிலில் பயணித்த ஆந்திராவைச் சேர்ந்த நபரிடமிருந்து கணக்கில் வராத 28 லட்சம் ரூபாயை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். அது ஹவாலா பணமா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முழு ஊரடங்கு காரணமாக, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் இணைந்து, ரயில் நிலையங்களில் சட்ட விரோதமாக, பிற மாநிலங்களிலிருந்து மது பாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா என்பதை சோதனை செய்யும் பணியில் தனிக்குழு அமைத்து ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் நிலையங்களில் வரக்கூடிய பயணிகளைக் கண்காணித்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 01) காலையில் சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகிக்கும்படி இளைஞர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சிவநேசன் தலைமையிலான போலீஸார் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

பணத்தை எடுத்துவந்த நபர்.

அப்போது, அவருடைய வயிற்றுப் பகுதி மட்டும் பெரிதாகத் தெரிந்ததால், சட்டையைக் கழற்றி சோதனை மேற்கொண்டனர். அப்போது, 28 லட்ச ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணத்தைத் துணியால் சுற்றி அதனை வயிற்றுப் பகுதியில் மறைத்து எடுத்துவந்தது தெரியவந்தது.

சம்மந்தப்பட்ட நபர் கோனகண்டியா சந்திரசேகர் (வயது 21) என்பதும் அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. பணத்தை உமா என்பவர் மூலமாக இங்கு சப்ளை செய்யப்படவிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அது ஹவாலா பணமா என்ற கோணத்திலும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x