Published : 01 Jun 2021 03:31 PM
Last Updated : 01 Jun 2021 03:31 PM

பாலியல் வழக்கு: ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் விசாரிக்க போக்சோ நீதிமன்றம் அனுமதி

ராஜகோபாலன்: கோப்புப்படம்

சென்னை

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றில், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசிரியராக இருந்தவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜகோபாலன் கடந்த 24ஆம் தேதி கைதானார்.

இந்த நிலையில், ராஜகோபாலன் ஜாமீன் கோரி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதேபோல், காவல்துறை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தது.

இந்த இரண்டு மனுக்களும் நீதிபதி முகமது பரூக் முன்பு நேற்று (மே 31) விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 3 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

அதேபோல், ராஜகோபாலனைக் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையின் மனு மீதான விசாரணை இன்றைக்கு (ஜூன் 1) தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி முகமது பரூக் முன்பு ராஜகோபாலனைக் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த நீதிபதி, ஜூன் 4 ஆம் தேதி, மாலை 3 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x