Published : 01 Jun 2021 12:58 PM
Last Updated : 01 Jun 2021 12:58 PM

வரும் 4-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: தமிழக அரசு உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

வரும் 4-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு வைகை அணையிலிருந்து 6,739 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, பொதுப்பணித்துறை இன்று (ஜூன் 01) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக பாசனப் பரப்பான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர் மற்றும் மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர், ஆக மொத்தம் 45,041 ஏக்கர் நிலங்களுக்கு 04.06.2021 முதல் 120 நாட்களுக்கு வைகை அணையிலிருந்து 6,739 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மற்றொரு செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 & 2 அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு 04.06.2021 முதல் 28.02.2022 வரை விநாடிக்கு 850 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x