Published : 01 Jun 2021 03:11 AM
Last Updated : 01 Jun 2021 03:11 AM
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், கரோனா தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் தடுப்பூசிகள் இருப்பு குறித்து அதிகாரிகளுடன் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியதொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு மே மாதம் 20.40 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், இதுவரை 18.67 லட்சம்தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. மீதமுள்ள 1.80 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குமாறு மத்திய சுகாதாரத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் 4.93 லட்சம் தடுப்பூசிகள்தான் கையிருப்பில் உள்ளன. இவற்றை அதிகபட்சம் 2 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். வரும் 6-ம் தேதி தான், 3.5லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.எனவே 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தடுப்பூசி போட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசுக்கு கடிதம்
இதற்கிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனாவைக் கட்டுப்படுத்துவது, ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறை தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கு உள்ளிட்ட பொதுநல வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.
அப்போது தமிழக மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மத்திய அரசு 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கியுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 83.08 லட்சம் தடுப்பூசிகளும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக 13.10 லட்சம் தடுப்பூசிகளும் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கடந்த மே 30 வரை 45வயதுக்கு மேற்பட்ட 75.73 லட்சம்பேருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 11.97 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போதைய இருப்பு இன்னும் 2 தினங்களுக்கு மட்டுமே உள்ளது என்பதால், தேவையான தடுப்பூசிகளை வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT