Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

கரோனா தொற்று உயிரிழப்புகளை அரசு மறைப்பது இல்லை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்

கரோனா தொற்றால் நிகழும்உயிரிழப்புகளை மறைப்பது இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 504 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார். இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, 11 கிலோலிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் சேமிப்புக் கலன்களையும் ஆய்வு செய்தார். சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி உடனிருந்தனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

500 படுக்கைகள்

இங்கு ஏற்கெனவே 300 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உட்பட 360 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் 203 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தற்போது 504படுக்கைகள் புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றில் 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை.

தமிழகத்துக்கு 83 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்துகிடைத்துள்ளன. மேலும், 18முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ.85.48 கோடி செலவில் தடுப்பூசிகள் பெறத் திட்டமிடப்பட்டது. அதில் இன்னும் 25 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும். தற்போதுவரை 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அந்த வகையில் தமிழகத்துக்கு இதுவரை 96 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

இதுவரை 87 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதல் அலையின்போது 3 சதவீதம் தடுப்பூசிகள் வீணானதாக தகவல் வந்தது. தற்போது 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அவை இன்னும் 2 நாட்களுக்கே போதுமானதாக இருக்கும்.

செங்கல்பட்டில் உற்பத்தி

செங்கல்பட்டில் செயல்படாமல் இருக்கும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில், தடுப்பூசி தயாரிக்கும் பணியை தமிழக அரசு மேற்கொள்வதா அல்லது மத்தியஅரசு மேற்கொள்வதா என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்துக்குள் தெரியவரும்.

இறப்பு எண்ணிக்கையை மறைப்பதில் எந்தப் பயனும் இல்லை. உண்மையான இறப்பு எண்ணிக்கையை மக்களிடத்தில் தெரியப்படுத்தினால்தான், மக்களுக்கு பயம் கலந்த விழிப்புணர்வு ஏற்படும். அதனால் கரோனாவால் நிகழும் இறப்பை மறைக்கக் கூடாது என அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு திமுக எம்எல்ஏக்கள் இதுவரை 1,500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி உள்ளனர். அவை அனைத்தும் தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் வசதிதேவைப்படும் மருத்துவமனைகளுக்கு, சென்னை மாநகராட்சி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x