Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

ஒரே மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 16 முறை அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதத்தில் 16 முறை விலை உயர்த்தப்பட்டதால் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்களுக்கு பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன் பின்னர், கடந்த ஜனவரி முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்த தொடங்கின. இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயராமல் ஒரே நிலையாக விற்பனையானது.

தேர்தல் முடிந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. 2 நாட்களுக்கு ஒருமுறை விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்படி, பெட்ரோல் விலை 25 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.95.76-க்கும், டீசல் விலை 25 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.89.90-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மே மாதத்தில் மட்டும் 16-வது முறையாக, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரே மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.3.33, டீசல் ரூ.4.15 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x