Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச் சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களுடன் வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்தும், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுப்பதாக வரும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர்களிடம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
கூட்டத்துக்குப் பின் அமைச்சர் மூர்த்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: முழு ஊரடங்கு நல்ல பலனை தர ஆரம்பித்துள்ளது. அதனால்தான், மதுரையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று குறைந்து வருகிறது. ஒரு வாரத்துக்கு முன்னர் 1,500 ஆக இருந்த பாதிப்பு தற்போது 700-க்கும் கீழ் வந்துள்ளது.
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்க மதுரையில் 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை அரசு மருத்துவமனை யில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள் ளது. இங்கு ஒரு நிமிடத்துக்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT