Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM

ஊரடங்கால் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வேதனை

கரோனா ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் மொத்தம் 46,107 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் தற்போது 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் வாழைத்தார்கள் முதிர்ச்சி யடைந்து அறுவடை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கரோனா முழு ஊரடங்கால் வாழைத்தார் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. வாழைப்பழங்களை பொறுத்தவரை பெட்டிக் கடைகள், சிறிய பழக்கடைகள்மற்றும் மளிகைக்கடைகளில் தான்அதிகம் விற்பனையாகும். அதுபோல திருமண விழாக்கள், கோயில் கொடை விழாக்கள் போன்ற விழாக்களுக்காகவும் வாழைத்தார்கள் மொத்தமாக வாங்கப்படும். தற்போது கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாலும், விழாக்கள் நடத்ததடை விதிக்கப்பட்டுள்ளதாலும் வாழைத்தார் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது.

10 லட்சம் ஏத்தன் வாழை

இதுகுறித்து தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டியைச் சேர்ந்த வாழை விவசாயி ஜி.கே.மணி கூறியதாவது: அத்திமரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 10 லட்சம் ஏத்தன் வாழை பயிரிடப்பட்டுள்ளது. சிவத்தையாபுரம், குரும்பூர், சோனகன் விளை உள்ளிட்ட பகுதிகளிலும் தாமிரபரணி பாசனத்தில் அதிகளவில் ஏத்தன் வாழை பயிரிடப்பட்டுள்ளது.

ஏத்தன் வாழைத்தார்களை கேரள வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச் செல்வார்கள். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ஏத்தன் வாழைக்காய் ரூ.42 என வாங்கினார்கள்.

தற்போது ரூ.21-க்கு தான் வாங்குகிறார்கள். முதலில் இந்த பகுதிக்கு தினமும் 30 வண்டிகள் (மினி லாரிகள்) ஏத்தன் வாழைத்தார் வாங்கிச் செல்ல வரும். தற்போது 10 வண்டிகள் தான் வருகின்றன.

இதேபோல் அனைத்து வாழைத் தார்களின் விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கதலி வாழைத் தார்களை இங்குள்ள வியாபாரிகள் வாங்கி சென்னை கோயம்பேடு சந்தைக்கு அனுப்புவார்கள்.

ஆனால், தற்போது கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளதால் கதலி வாழைத்தார்களை வாங்க ஆட்கள் இல்லை. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ கதலி வாழைக்காய் ரூ.12 முதல் ரூ.15 வரை விலைபோனது. தற்போது வெறும் ரூ.3-க்கு தான் வாங்கிச் செல்கின்றனர்.

கடுமையான நஷ்டம்

அதுபோல கிலோ ரூ.15-க்குவிற்பனையான சக்கை வாழைத்தார் தற்போது கிலோ ரூ.3-க்கு விற்பனை யாகிறது. ரூ.500-க்கு விற்பனையான கோழிக்கோடு தார் ரூ.200-க்கும், ரூ.400-க்கு விற்பனையான நாட்டு வாழைத்தார் ரூ.100-க்கும் விற்பனையாகிறது.

விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சாகுபடி செலவு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. விற்பனை குறைவு காரணமாக பல இடங்களில் வாழைத்தார்கள் தோட்டங்களிலேயே பழுத்து வீணாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு வாழைத்தார்களை விற்பனை செய்து வருகின்றனர் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x