Published : 25 Dec 2015 09:17 AM
Last Updated : 25 Dec 2015 09:17 AM
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 28-வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 10.45 மணிக்கு அங்கு வந்த முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதிமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், ‘‘ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்’’ என அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் காலை 11 மணிக்கு முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.
எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண் டர்கள் அவரது நினைவிடத்தில் குவிந்தனர்.
இதனால் கடற்கரைச் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT