Last Updated : 31 May, 2021 02:59 PM

 

Published : 31 May 2021 02:59 PM
Last Updated : 31 May 2021 02:59 PM

முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக தூத்துக்குடியில் ஒரு வாரத்தில் 4,020 இருச்சக்கர வாகனங்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக ஒரு வார காலத்தில் 4,020 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கால் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு மாவட்ட காவல் துறை சார்பில் அரிசிப் பை மற்றும் காய்கறி தொகுப்புகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு தாளமுத்துநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் சுனாமி காலனி மற்றும் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 120 பேருக்கு அரிசிப் பைகள் மற்றும் காய்கறி தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு வரும் 7-ம் தேதி வரை அமலில் இருக்கும். ஊரடங்கை நடைமுறைபடுத்தும் வகையில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கபட்டு தேவையில்லாமல் வெளியில் சுற்றிதி ரிபவர்கள் மீது வழக்கு பதிவு செய்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,020 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் கரோனா கால சிறப்பு சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாராவது உதவிகள் தேவைப்பட்டால் 9514144100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் தேவைப்பட்ட உதவிகள் செய்யப்படும். இந்த சேவை மையத்துக்கு இதுவரை உதவி கேட்டு 160 அழைப்புகள் வந்துள்ளன.

உதவிகள் கேட்ட அனைவருக்கும், அவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரண உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார் எஸ்பி.

ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஏடிஎஸ்பி கோபி, உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x