Last Updated : 31 May, 2021 02:47 PM

 

Published : 31 May 2021 02:47 PM
Last Updated : 31 May 2021 02:47 PM

மகளிர் குழு கடன் தவணையைக் கட்டாயப்படுத்தி வசூலித்த நிறுவனங்கள்: நடவடிக்கை எடுக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கோரிக்கை

கரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் குழுவுக்கு வழங்கியுள்ள தொகைக்கான கடன் தவணையைக் கட்டாயப்படுத்தி வசூலிப்பதாகவும், அந்த நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூர், பூதலூர் தாலுகா அதிக அளவு ஏழை, எளிய விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிரம்பிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதி. வட்டிக்குக் கடன் பெற்றே அவர்கள் வாழ்வை நகர்த்தி வருகின்றனர்.

கரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்துள்ள அப்பகுதிப் பெண்களிடம் தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், மகளிர் கடன் குழுக்கள் ஆகியவை கடன் தவணையைக் கேட்டு, அநாகரிகமாகப் பேசி தவணையை மிரட்டுவதாகத் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக அரசு அளித்த முதல் தவணைத் தொகை ரூ.2000 தொகையை நிதி நிறுவன ஊழியர்கள் வசூலித்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட ஆச்சாம்பட்டி கிராம மக்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் இரா.இராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சு.லதா சுப்பிரமணியன், நிர்வாகிகள் உள்ளிட்டோர் தமிழக அரசிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தனர்.

அந்தக் கோரிக்கையில், கரோனா ஊரடங்கு காலத்தில் மகளிர் குழு கடன் தவணையைக் கட்டாயப்படுத்தி வசூலிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அடாவடி வசூலைத் தடுத்து நிறுத்தி அடுத்த 3 மாதங்களுக்குக் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த விலக்கு அளிப்பதோடு வட்டித் தொகை முழுவதையும் ரத்து செய்ய நிதி நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தல் செய்ய வேண்டுமெனவும், அரசு அடுத்த கட்டமாக ஜூன் 3-ம் தேதி அளிக்கவுள்ள நிவாரணத் தொகையையும் நிதி நிறுவனங்கள் வசூலிக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x