

தாய்ப்பால் ஊட்டும் தாய் மார்கள், தொடர் நோயாளிகள் தடுப்பூசி போடுவது அவசியம் என்று புதுச்சேரி சுகாதாரத் துறை செயலாளர் அருண் என்று தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான முயற்சியில் சுகாதாரத் துறை உள்ளது. இதற்காக பல்வேறு முகாம்களை அமைத்து 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் தவிர 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட இணையதளத்தில் முன்பதிவு முறை தொடங்கி உள்ளது. இளம் வயதினர் ஆர்வத்துடன் தாமாக முன்வந்து தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.
இதய நோய் உள்ளவர்கள் அதற்கான சிகிச்சை எடுத்து கொள்வோர், ரத்தக்கொதிப்பு நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ஆஸ்மா நோயாளிகள், பக்கவாத நோயாளிகள், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புடையவர்கள், டயாலிஸிஸ் செய்து கொள்பவர்கள், புற்றுநோயாளிகள், எச்ஐவி நோயாளிகள், தலசீமியா நோயாளிகள், தசைநார் தேய்வு நோயாளிகள், மனநலம் குன்றியவர்கள், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை உள்ளது. இவர்களுக்கு கரோனா நோய்தாக்கம் ஏற்பட்டால் அது தீவிரமாகவும், இறப்பு விகிதம் அதிகம் உள்ளதாலும் இவர்கள்எந்த வித தயக்கமும் இன்றி, அவர்களுக்கான முன்னுரிமையுடன் கரோனா தடுப்பூசியை செலுத்திகொள்ள வேண்டும். தாய்ப்பால்ஊட்டும் தாய்மார்களும் இத்தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம். மேலும் சந்தேகங்கலுக்கு 104 உதவி எண் அல்லது அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.