Published : 31 May 2021 03:14 AM
Last Updated : 31 May 2021 03:14 AM

திருப்பத்தூரில் உரிய அனுமதியின்றி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு ‘சீல்’

திருப்பத்தூரில் உரிய அனுமதி யின்றி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் ‘சீல்' வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை நகர் புறங்களைக் காட்டிலும் கிராமப்பகுதி களில் அதிகரித்து வருகிறது. கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கிளினிக் மற்றும் தனியார் மருத்துவமனை களில் காய்ச்சல் எனக்கூறி நிறைய பேர் சிகிச்சைக்காக வருகின்றனர்.

கிராம மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொள்ளும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் அவர்களிடம் அதிக கட்டணத்தை வசூலித்து, அனுமதியில்லாமல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து, திருப் பத்தூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் மீது கிராமமக்களுக்கு நம்பிக்கை வரும் அளவுக்கு மருத்துவ சிகிச்சைகள் மேம்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் அரசு மருத்துவமனை களில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் நடமாட்டத்தை தடுக்கவும், அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், போலி மருத்துவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதியில்லாமல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப் பதாகவும், அதற்கான அதிக கட்டணத்தை வசூல் செய்வதாக சுகாதாரத்துறையினருக்கு தெரிய வந்தது.

அதன்பேரில், திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், திருப்பத்தூர் நகர காவல் துறையினர் சக்தி நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, அங்கு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வந்ததும், கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் அதிக மக்களை ஒரே இடத்தில் அமர வைத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, அதற்காக அதிக கட்டணத் தொகையை அந்த மருத்துவமனை நிர்வாகம் வசூலித்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த வர்களை வெளியேற்றி சுகாதாரத் துறையினர் மருத்துவமனைக்கு ‘சீல்' வைத்தனர்.

இது தொடர்பாக மருத்துவ மனை நிர்வாகத்தினரிடம் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x