Last Updated : 30 May, 2021 06:31 PM

 

Published : 30 May 2021 06:31 PM
Last Updated : 30 May 2021 06:31 PM

நீதிமன்றம் உத்தரவிட்டும், சட்டப்பேரவையில் அறிவித்தும் சீரமைக்கப்படாத ஷீல்டு கால்வாய்: பெரியாறு நீர் திறப்புக்குள் விடிவு பிறக்குமா?

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், சட்டப்பேரவையில் அறிவித்தும் பல ஆண்டுகளாக ஷீல்டு கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது. பெரியாறு நீர் திறப்புக்குள் இதைச் சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பெரியாறு பாசன நீர் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 6,748 ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது. இதற்காக 5 பெரியாறு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஷீல்டு கால்வாய் மூலம் 40 கண்மாய்களுக்குத் தண்ணீர் வருகிறது. இதன் மூலம் கள்ளராதினிப்பட்டி, திருமலை, மேலப்பூங்குடி, சாலூர், திருமன்பட்டி, சோழபுரம் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,748.25 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

ஷீல்டு கால்வாய் மதுரை மாவட்டம், மேலூர் குறிச்சிப்பட்டி கண்மாயில் தொடங்கி சோழபுரம் எட்டிச்சேரி கண்மாய் வரை 7 கி.மீ. செல்கிறது. இந்தக் கால்வாய் 1925-ம் ஆண்டு ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டது. இன்று வரை மண் கால்வாயாகவே உள்ளது. அதையும் முறையாகச் சீரமைக்காததால் ஆங்காங்கே முட்புதர்கள் மண்டியுள்ளன. தண்ணீர் திறந்துவிட்டாலும் கண்மாய்களுக்குச் செல்வதில்லை. இதனால் 7 ஆண்டுகளாக அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்த வழக்கில், ஷீல்டு மண் கால்வாயை, கல் கால்வாயாக மாற்ற வேண்டுமென, 2016 டிசம்பர் 8-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஷீல்டு கால்வாய் ரூ.22 கோடியில் புனரமைக்கப்படும் என 110 விதியின் கீழ் 2018-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்கிடையில் குடிமராமத்து திட்டத்தில் குறிச்சிப்பட்டி கண்மாயில் இருந்து முத்தம்பட்டி வரை ஒரு கி.மீ.க்கு ரூ. 1.47 கோடியில் ஷீல்டு கால்வாய் சீரமைக்கப்பட்டது. முத்தம்பட்டியில் இருந்து சோழபுரம் எட்டிச்சேரி கண்மாய் வரை சீரமைக்கவில்லை.

இதுகுறித்து பெரியாறு பாசன விவசாயிகள் கூறியதாவது:

''மேலூர் பகுதிக்கு முதல் போகத்துக்கு பெரியாறு பாசன நீர் திறக்கும்போதே, ஷீல்டு கால்வாய்க்கும் திறக்க வேண்டும். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாகத் தண்ணீர் திறப்பதில்லை. இதையடுத்து, நாங்கள் தொடர்ந்து போராடி, தண்ணீர் பெற்று வருகிறோம்.

மேலும் கால்வாய் சேதமடைந்து இருப்பதால் தண்ணீர் திறந்தாலும் கண்மாய்களுக்குத் தண்ணீர் வருவதில்லை. இதனால் 7 ஆண்டுகளாக 1,700 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுகின்றன. இதையடுத்து பலகட்டப் போராட்டத்துக்குப் பிறகு, ரூ.22 கோடியில் கால்வாய் சீரமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால் அதன் பிறகும் பணிகள் தொடங்கவில்லை''

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஷீல்டு கால்வாய் மண் கால்வாயாக இருப்பதால் அகலம் அதிகமாக உள்ளது. அதில் 3 மீ. அகலத்துக்கு கல் கால்வாய் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கும்'' என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x