ஈஷா அறக்கட்டளை சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி, கா.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் கோவையில் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் உள்ளிட்ட பொருட்கள்.
ஈஷா அறக்கட்டளை சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி, கா.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் கோவையில் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் உள்ளிட்ட பொருட்கள்.

ஈஷா சார்பில் 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்: கோவையில் அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டன

Published on

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் கோவையில் ஈஷா சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோவை அரசு மருத்துவமனைக்கு மட்டும் 500 முழு கவச உடைகள் (பிபிஇ கிட்), 5,000 என்-95 முகக்கவசங்கள், 500 சிபிஏபி வகை முகக்கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. அத்துடன், கரோனாவால் உயிர் இழக்கும் நபர்களை மயானத்துக்கு கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன. இது தவிர, ஈஷா சார்பில் கோவையில் உள்ள கிராமங்களில் பல்வேறு நிவாரணப் பணிகளை ஈஷா பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் நேரடியாக செய்து வருகின்றனர்.

கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகப் பயிற்சிகளை கற்றுக் கொடுப்பது, முன்களப் பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சானிட்டைசர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதில் அடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in