Published : 30 May 2021 03:13 AM
Last Updated : 30 May 2021 03:13 AM

சூறாவளியால் பாம்பனில் தவித்த நாகை மீனவர்கள்: ரயில் தூக்குப் பாலத்தை கடந்து ஊர் திரும்பினர்

சூறாவளியால் பாம்பனில் தவித்த 23 நாகை மீனவர்கள் நேற்று பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தைக் கடந்து ஊர் திரும்பினர்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், பழனியம்மாள் ஆகியோருக்குச் சொந்தமான இரு ஆழ்கடல் விசைப் படகுகளில் சென்ற 23 மீனவர்கள், கேரளாவில் தங்கி ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்தனர். அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான டவ்-தே புயலால் சொந்த ஊர் செல்ல மே 24-ம் தேதி பாம்பன் வந்தனர்.

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தைத் திறந்துவிட தாமதமானதால் 2 படகுகளையும் குந்துகால் கடற்கரையில் நிறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் மே 25-ம் தேதி பாம்பன் கடற்பகுதியில் வீசிய சூறாவளியால் இந்த இரு படகுகளும் குருசடை தீவில் கரை தட்டி நின்றன.

சூறாவளி காற்று நின்றதும் படகை சரி செய்து குந்துகால் துறைமுகத்தில் 2 படகுகளும் நிறுத்தப்பட்டன. மேலும் ஊரடங்கால் படகில் இருந்த மீனவர்கள் உணவு, குடிநீரின்றி சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி பாம்பன் ரயில் தூக்குப் பாலம் நேற்று திறக்கப்பட்டு 2 படகுகளில் இருந்த மீனவர்கள் நாகப்பட்டினத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x