Last Updated : 29 May, 2021 09:16 PM

 

Published : 29 May 2021 09:16 PM
Last Updated : 29 May 2021 09:16 PM

புதுச்சேரி அரசியல்: டெல்லி விரைந்த நமச்சிவாயம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவுடன் சந்திப்பு  

புதுச்சேரி

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே அமைச்சரவை விவகாரம் தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில், டெல்லி விரைந்த புதுச்சேரி பாஜக சட்டப்பேரவை கட்சிth தலைவர் நமச்சிவாயம் தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசினார்.

புதுச்சேரி சட்டப்பேரவைth தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் கைபற்றின. இந்த கூட்டணிக்கு புதுச்சேரியில் தலைமை வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கடந்த 7-ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.

அமைச்சரவையில் பாஜக இடம் பெறும் என ரங்கசாமி உறுதி அளித்தாலும் இதுவரை இல்லாத துணை முதல்வர் பதவி உட்பட 3 அமைச்சர், சபாநாயகர் பதவிகளைக் கோரி வருவதால் அமைச்சரவை பதவியேற்க முடியவில்லை.

புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற தினத்திலேயே, செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் பாஜக தலைவர்கள் பாஜகவுக்கு ஒரு துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் பதவி ஏற்பதற்காக, பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.

ஆனாலும், என்.ஆர் காங்கிரஸ் தரப்பில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்த எவ்வித தகவலும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர். இதனிடையே மத்திய அரசு மூலம் பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து தனது பலத்தை 9 ஆக பாஜக உயர்த்தியது.

அத்துடன் புதுச்சேரியில் இதுவரை இல்லாத வகையில் இம்முறை தேர்தலில் 6 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 3 பேர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பாஜகவின் பலம் 12 ஆக உயர்ந்துள்ளது. இது கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப் பேரவைக்கான தற்காலிக பேரவைத் தலைவர் நியமிக்கப்பட்டு, முதல்வர் மற்றும் எம்எல்ஏக்கள் மே 26-ம் தேதி பதவி ஏற்றுள்ளனர். அடுத்ததாக அமைச்சரவை விரிவாக்கம் செய்வது, பேரவைத் தலைவர்தேர்வு நடைபெற வேண்டும்.

இதில், பாஜக தரப்பில் துணை முதல்வர், இரண்டு அமைச்சர்கள், பேரவைத் தலைவர் பதவிகளும், மேலும் வாரியத் தலைவர்கள் பதவிகளையும் கோரியுள்ளனர். இதில், துணை முதல்வர் உள்ளிட்ட இரு அமைச்சர்கள், பேரவைத் துணைத் தலைவர் ஆகிய பதவிகளை பாஜகவுக்கு வழங்க என்.ஆர். காங்கிரஸ் விரும்புகிறது.

இது தொடர்பாக, பாஜக மேலிட தலைவர்கள் ரங்கசாமியிடம் பேசி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவர் நமச்சிவாயம், பொதுச்செயலர் செல்வம் எம்எல்ஏ ஆகியோர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் இன்று மாலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்துp பேசினர். இந்த சந்திப்பின்போது புதுச்சேரி மாநிலத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையைப் பற்றியும், புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் விவரித்தனர். அதனை நட்டா கேட்டறிந்தார்.

மேலும் புதுச்சேரி பாஜக சார்பில் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவர்களின் இந்த திடீர் சந்திப்பினால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x