Last Updated : 29 May, 2021 06:46 PM

 

Published : 29 May 2021 06:46 PM
Last Updated : 29 May 2021 06:46 PM

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்போரிடம் அலைபேசியில் கலந்துரையாடிய அமைச்சர்கள்

கோவை மாநகராட்சி அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அலைபேசி அழைப்புகள் மூலமாகத் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்களிடம் அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துரையாடினர்.

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர், கரோனா தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள கோவையில் முகாமிட்டு, மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்படும் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். அவ்வப்போது அதிகாரிகளுக்குத் தேவையான உதவிகள், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு இன்று சென்ற அமைச்சர்கள், மாநகராட்சி அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு அலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்களிடம் நேரடியாகப் பேசி, கலந்துரையாடினர். இதில், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்களின் தேவைகள், அவர்களது பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தொற்றுத் தடுப்புப் பணிகள், அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சரிவரக் கிடைக்கிறதா என்பதையும் கேட்டு அறிந்தனர்.

அப்போது, அலைபேசி மூலமாகத் தொடர்புகொண்ட நபர் ஒருவர், தனது குடும்பத்தினருக்கு உணவளித்து உதவ அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை விடுத்தார். அவரது முகவரியைக் கேட்டறிந்த அமைச்சர், இரு வேளை உணவு கேட்ட அவரது வீட்டுக்கு, 3 வேளையும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் தொடர்புடைய நபரின் வீட்டுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x