Published : 29 May 2021 05:21 PM
Last Updated : 29 May 2021 05:21 PM

நிலக்கோட்டையில் விளைநிலங்களுக்கே சென்று மல்லிகை பூக்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள்: விவசாயிகள் மகிழ்ச்சி 

நிலக்கோட்டையில் விளைநிலங்களுக்கே சென்று மல்லிகை பூக்களை வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முழு ஊரடங்கு காரணமாக கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நிலக்கோட்டை பூ மார்க்கெட் செயல்படவில்லை. இதனால் பூ வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

கோடைகாலத்தில் மல்லிகை பூக்களின் விளைச்சல் அதிகம் இருக்கும் என்பதால் சீசன் நேரத்தில் முழு ஊரடங்கால் விளைந்த பூக்களை விற்பனைக்கு கொண்டுசெல்லமுடியாத நிலையில் பூ விவசாயிகள் இழப்பை சந்தித்தனர்.

இந்நிலையில் மல்லிகைப்பூ விவசாயிகளின் இழப்பைத் தவிர்க்க தோட்டக்கலைதுறை மூலம் பூக்களை நேரடியாக அவர்களின் விளைநிலங்களுக்கே சென்று கொள்முதல் செய்ய வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கு அவர்கள் சம்மதிக்கவே, தற்போது விளைநிலங்களுக்கு நேரடியாக சென்று மல்லிகை பூக்களை கொள்முதல் செய்துவருகின்றனர்.

நிலக்கோட்டை பூ வியாபாரி முருகேசன் கூறுகையில், விளைநிலங்களுக்கு நேரடியாகச் சென்று பறிக்கப்பட்ட பூக்களை அன்றைய மார்க்கெட் விலைக்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறோம்.

அதற்கான பணத்தை உடனடியாக கொடுத்துவிடுகிறோம். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறு குறு விவசாயிகள் 500 க்கும் மேற்பட்டோரிடம் நாள் ஒன்றுக்கு 2,000 கிலோ பூக்கள் வரை பூ வியாபாரிகள் கொள்முதல் செய்து வாசனை திரவிய தொழிற்சாலை மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பிவருகின்றனர், என்றார்

பொது முடக்க நேரத்தில் மல்லிகைப்பூ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து பூ வியாபாரிகள் செய்துவரும் முயற்சியால் விவசாயிகள் இழப்பை தவிர்த்து வருவாய் கிடைப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x