Published : 29 May 2021 02:23 PM
Last Updated : 29 May 2021 02:23 PM

ஊரடங்கு முடியும் வரை தேவைப்படுவோருக்குக் கரூரில் 3 வேளை உணவு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் வழங்கினார்.

கரூர்

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு முடியும் வரை உணவு தேவைப்படுபவர்களுக்குச் சிறப்பு உணவளிக்கும் திட்டம் மூலம் 3 வேளை உணவு வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு, கரூர் ஓபிஜி பவர் ஜெனரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.50 லட்சம், வி.செந்தில்பாலாஜி அறக்கட்டளை, சிவா டெக்ஸ்டைல்ஸ் தலா ரூ.7.5 லட்சம், பொறியாளர் சந்திரசேகரன் ரூ.1 லட்சம் என ரூ.66 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ஆக்சிஜன் ப்ளோ மீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 29) நடைபெற்றது.

இதில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் நிறுவனங்கள் வழங்கிய ரூ.66 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள், ரூ.1.55 லட்சம் மதிப்பிலான காசோலையை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''தமிழகதத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் கரூர் மாவட்டத்தில் முதியவர்கள், ஆதரவற்றவர்கள் யாரும் உணவின்றி இருக்கக்கூடாது என்பதால் சிறப்பு உணவளிக்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்படி மாவட்டத்தில் எந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு உணவு தேவை என்றாலும் உணவு விநியோகிக்கப்படும். உணவு தேவைப்படுபவர்கள் 94987 47644, 94987 47699 என்ற இரு செல்போன் எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

மறுநாள் காலை உணவு தேவை என்பவர்கள் முதல் நாள் இரவு 8 மணிக்குள்ளும், மதிய உணவு தேவை என்பவர்கள் அன்றைய தினம் காலை 8 மணிக்குள்ளும், இரவு உணவு தேவை என்பவர்கள் மதியம் 2 மணிக்குள்ளும் தகவல் தெரிவிக்க வேண்டும். ஊரடங்கு முடியும் வரை 3 வேளையும் உணவு தேவை என்பவர்கள் முதல் அழைப்பிலேயே அதனைத் தெரிவித்துவிடலாம். ஒவ்வொரு முறையும் அழைக்கத் தேவையில்லை. சிறப்பு உணவு வழங்கும் திட்டம் நாளை (மே 30) முதல் ஊரடங்கு முடியும் வரை செயல்படுத்தப்படும்'' என்று அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் இரா.முத்துசெல்வன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x