Published : 29 May 2021 12:19 PM
Last Updated : 29 May 2021 12:19 PM

தனியார் மருத்துவமனையில் சளி, காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர், சிடி ஸ்கேன் மட்டும் எடுப்போர் தகவல்கள்: பட்டியலை எடுக்கிறது சென்னை மாநகராட்சி 

சென்னை

தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் கிளினிக் வைத்துள்ள மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் குறித்த தகவலை மாநகராட்சிக்கு அளிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று ஸ்கேன் மையங்களில் சிடி ஸ்கேன் எடுப்பவர்களின் பட்டியலையும் சென்னை மாநகராட்சி கேட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் கோவிட் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற 659 நபர்களின் விவரங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு RTPCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மண்டல கள ஒருங்கிணைப்புக் குழு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் காணொலி வாயிலாக நேற்று மாலை நடந்தது.

இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் அல்லது கோவிட் தொற்று உள்ளவராகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்த தகவல்களை நாள்தோறும் மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 27.05.2021 அன்று 402 தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களிலிருந்து காய்ச்சல், சளி, இருமல் போன்ற கோவிட் தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற 659 நபர்களின் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இந்த 659 நபர்களுக்கும் RTPCR கோவிட் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள CT ஸ்கேன் மையங்களில் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் RTPCR பரிசோதனை மேற்கொள்ளாமல் நேரடியாக மார்பக ஸ்கேன் எடுப்பதாகத் தகவல்கள் பெறப்படுகின்றன.

எனவே, சென்னையில் உள்ள 40 CT ஸ்கேன் மையங்களில் மார்பக ஸ்கேன் எடுக்கும் நபர்களின் பெயர், தொலைபேசி மற்றும் முகவரி ஆகிய தகவல்களை gccpvtctscanreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டு இதனைக் கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 60 வயதிற்கு மேற்பட்ட தொற்று பாதித்த நபர்களுக்கு முதற்கட்டப் பரிசோதனை மையங்களுக்கு (Screening Center) அழைத்துச் சென்று எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளும், 60 வயதிற்குக் கீழுள்ள நபர்களுக்கு வீடுகளிலேயே மாநகராட்சி மருத்துவக் குழுவால் முதற்கட்டப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

தற்பொழுது 45 வயதிற்கு மேற்பட்ட தொற்று பாதித்த நபர்களையும் முதற்கட்டப் பரிசோதனை மையங்களுக்கு (Screening Center) அழைத்துச் சென்று எக்ஸ்ரே போன்ற பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உத்தரவிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில், இணை ஆணையர் கல்வி, துணை ஆணையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x