Published : 29 May 2021 12:07 PM
Last Updated : 29 May 2021 12:07 PM

மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் கரோனா தொற்றால் மரணம்

மூத்த பத்திரிகையாளரும் மார்க்ஸிய சிந்தனையாளருமான இரா.ஜவஹர் (71), கரோனா பெருந்தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (மே 28) உயிரிழந்தார். அவருடைய மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1950 ஜனவரி 1இல் மதுரையில் பிறந்தவரான ஜவஹர், சென்னை அம்பத்தூரில் பணியாற்றியபோது தொழிற்சங்கத்தில் முழுநேர ஊழியராகச் செயல்பட்டவர். அதன் பிறகு ‘தினமணி’ நாளிதழிலும் ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’, ‘ஜூனியர் போஸ்ட்’ உள்ளிட்ட பத்திரிகைகளிலும் இதழியல் பணியை மேற்கொண்டார். ‘நக்கீரன்’ இதழில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதினார். அப்படி அவர் எழுதிய ‘கம்யூனிஸம்: நேற்று-இன்று-நாளை’, ‘மகளிர் தினம்- உண்மை வரலாறு’ ஆகிய தொடர்கள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

கம்யூனிச கொள்கையில் தீவிரப் பற்றுகொண்ட அவர் இளைஞர்கள் பலருக்கு இடதுசாரி அரசியல் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். இளம் பத்திரிகையாளர்கள் பலரை ஊக்குவித்தார். இடதுசாரி இயக்கங்களைத் தாண்டி அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கங்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவும் விளங்கினார்.

ஜவஹர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “மூத்த பத்திரிகையாளரும் பொதுவுடமைச் சிந்தனையாளருமான இரா.ஜவஹர் மறைவுற்ற செய்தியறிந்து பெரிதும் வேதனை அடைந்தேன். அவரது மறைவு முற்போக்குச் சிந்தனை உலகுக்குப் பேரிழப்பாகும்” என்று கூறியுள்ளார்.

ஜவஹரின் மனைவியான பேராசிரியர் சி.பூரணம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரோனா தொற்று காரணமாக மரணமடைந்தார். இந்த இணையருக்கு டார்வின், பாலு ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x