Published : 28 May 2021 08:44 PM
Last Updated : 28 May 2021 08:44 PM

அரசியல் செய்வதற்கு இது உகந்த நேரமில்லை: அதிமுகவினருக்கு அமைச்சர் பி.மூர்த்தி கண்டிப்பு

மதுரை

‘‘அரசியல் செய்வதற்கு இது உகந்த நேரமில்லை, ’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமாருக்கு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏ-க்கள் மதுரை மாவட்டத்தில் அதிமுக வெற்றிப்பெற்ற எம்எல்ஏ தொகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைப்பணிகள் புறக்கணிப்பட்டுள்ளதாக ஆட்சியர் அனீஷ்சேகரிடம் மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று மதுரை மாநகராட்சி மடீட்சியா வளாகத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், மடீட்சியா தலைவர் முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பி.மூர்த்தி பேசியதாவது:

தொழிற்சாலைகளின் பணியாளர்கள், போக்கு வரத்துத்துறை, ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டிட தொழிலாளர்கள், கோயில் பணியாளர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றுவர்களுக்கு 65,000 தடுப்பூசிகள் தொடர்ந்து மூன்று தினங்களாக ஆங்காங்கே முகாம்கள் மூலம் நடைபெற்று வருகிறது.

மதுரையில் கரோனா தடுப்பு பணிக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு அவர் சார்பில் ஒருவர்தான் இருக்க வேண்டும். மற்றவர்கள் எல்லாம் வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு நோயாளிகளுக்கும், உதவியாளர்களுக்கும் மூன்று நேரங்களும் உணவுகள் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு காரணமாக மதுரை மாநகரில் கரோனா தொற்று நோய் என்பது குறைய ஆரம்பித்துள்ளது. மக்களை காப்பாற்றக்கூடிய இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் அரசியல் பண்ணுவதற்கு உகந்த நேரம் அல்ல. எதிர்கட்சியினர் அவர்களது ஆலோசனையினை வழங்குங்கள் என்று கூறியும் இரண்டு முறை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தனர்.

மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை கடந்த ஆட்சியில் இருந்தது. தேர்தல் காலத்தில் இரண்டு மாதகாலம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். 6 மாநிலங்களில் கரோனா தொற்று இரண்டாவது அலை அதிகளவில் உள்ளது. மதுரை மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் வேண்டிய மருத்துவர்கள், செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்க நடவடிக்கை எடுத்து உள்ளார்.

கிராமப்புறங்களில் 100 ஊராட்சிகளில் 10 படுக்கைகள் அமைக்கப்பட்டு 420 ஊராட்சிகளிலும் செவிலியர்கள் மூலமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாக காய்ச்சல் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருமங்கலம் தொகுதியில் கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட கிராமங்களில் வீடு வீடாக கணக்கெடுக்கும்பணி நடைபெறுகிறது.

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் உள்ளது. ஆக்சிஜன் படுக்கைகள் 60 உள்ளது. அதில் 15 நோயாளிகளின்தான் உள்ளார்கள். அங்கு வருபவர்களை சேர்ப்பதற்கு எல்லா வழிவகையும் உள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது. கொரோனா நோயை கட்டுப் படுத்துவதற்கும், தேவைகளை நிறைவேற்றுவதற்கும் வேண்டிய பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கும் 8 முதல் 10 டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x