Published : 28 May 2021 08:55 PM
Last Updated : 28 May 2021 08:55 PM

மருத்துவக் கருவிகள் வாங்க ரூ.41 கோடி: முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு

சென்னை

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தபடி ஏற்கெனவே ரூ.100 கோடியை மருந்து உபகரணங்கள் வாங்கச் செலவழித்த நிலையில் மீண்டும் ரூ.41 கோடி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் இன்றைய செய்திக்குறிப்பு:

“தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கரோனா தடுப்பு முயற்சிகளுக்குக் கை கொடுக்கின்ற வகையில், நிதி வழங்க வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, இன்றுவரை (28-5-2021) 186.15 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறு, இதுவரை பெறப்பட்டுள்ள தொகையிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலமாகக் கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.

இதனையடுத்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாள்தோறும் 1.6 லட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை இரண்டாவது கட்டமாக வழங்கிட முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார்.

தற்போது சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற அயல் நாடுகளிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயினை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் இன்று (28-5-2021) ஆணையிட்டுள்ளார்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x