

ராமேசுவரம் அருகே உச்சிப்புளியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு உட்பட 11 வகையான உணவுப் பொருட்கள் காவல்துறையினரின் முயற்சியில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
ராமேசுவரம் அருகே உச்ச்பிப்புளியில் உள்ள எஸ். எம். காலணியில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் உள்ளன.
இந்த நரிக்குறவர்கள் தங்களுடைய கைவினைப் பொருட்களான ஊசிமணி, பாசிமணி உள்ளிட்ட மணி மாலைகள், பனை ஓலையிலான வண்ணமிடப்பட்ட அலங்காரக் கூடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைத் தயாரித்து, அருகில் உள்ள ராமநாதபுரம் நகரப் பகுதிகளில் விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
தற்போது கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நரிக்குறவர்கள் தங்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய வெளியில் செல்ல முடியாமல் உச்சிப்புளி எஸ்.எம். காலணியிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த கிராம மக்களுக்கு காவல்துறையினரின் முயற்சியில் கரோனா நிவாரணமாக உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உச்சிப்புளி தனிப்பிரிவு காவலர் முரளிகிருஷ்ணன் ஏற்பாட்டில் ராமநாதபுரம் சின்னக்கடையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களான ஹமீது அலி, நூருல் ஜன்னத் ஆகியோரின் பொருளுதவியுடன் உச்சிப்புளி காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் கணேசன் எஸ். எம். காலனியில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்களுக்கு அரிசி கிலோ, சர்க்கரை, சமையல் எண்ணெய் மற்றும் 12 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்கினர்.