வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 750 ஆக்சிஜன் சிலிண்டர்கள்: முதல்வர் ஸ்டாலின் 8 மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு

ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின்.
ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின்.
Updated on
2 min read

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 750 ஆக்சிஜன் சிலிண்டர்களை 8 மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 28) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, கரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலையால், தற்போது நிலவி வரும் ஆக்சிஜன் மற்றும் அதன் தொடர்புடைய சாதனங்களின் பற்றாக்குறையைச் சமாளிக்கும் விதமாக, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) போதிய அளவுக்கான ஆக்சிஜன் சாதனங்களைக் கொள்முதல் செய்யப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

முதல்வரின் உத்தரவுக்கு இணங்க சிப்காட் நிறுவனம், சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் துபாயிலிருந்து 1,915 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2,380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகளையும், 3,250 ஓட்ட அளவு சிலிண்டர்களையும், 5,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், 800 ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்களையும் என, மொத்தம் 40.71 கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்து வருகிறது.

மேலும், 4.33 கோடி ரூபாயில் பல்வேறு ஆக்சிஜன் தொடர்பான சாதனங்களைக் கண்டறிந்து கொள்முதல் செய்து மருத்துவப் பணிகளுக்கு வழங்கியதன் மூலம் சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில், இதுவரை ஆக்சிஜன் இணைக்கப்படாத 1,000 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன.

மேலும், சிப்காட் நிறுவனம், தனது தொழில் பூங்காக்களின் அருகில் அமைந்திருக்கும் தொழிற்பிரிவுகளிலிருந்து, 2,000 ஆக்சிஜன் சிலிண்டர்களைத் தருவித்ததுடன், சிப்காட் மூலமாக சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை, சென்னை மாவட்டத்திற்கு 1,010, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 250, சிவகங்கை மாவட்டத்திற்கு 230, விழுப்புரம் மாவட்டத்திற்கு 175, திருவள்ளூர் மாவட்டத்திற்கு 130, வேலூர் மாவட்டத்திற்கு 100, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 100, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 100, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 100, கடலூர் மாவட்டத்திற்கு 100, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 95, கரூர் மாவட்டத்திற்கு 75, தருமபுரி மாவட்டத்திற்கு 75, நீலகிரி மாவட்டத்திற்கு 75, நாமக்கல் மாவட்டத்திற்கு 75, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 75, திருவாரூர் மாவட்டத்திற்கு 75, தேனி மாவட்டத்திற்கு 75, திண்டுக்கல் மாவட்டத்திற்கு 75, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 75, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 75, விருதுநகர் மாவட்டத்திற்கு 75, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 75, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 60 மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 50 என, மொத்தம் 3,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை கரோனா சிகிச்சைப் பயன்பாட்டுக்காக ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியான பெருந்தொற்றுப் பரவல் சூழ்நிலையைச் சமாளித்திட இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படும் விதமாக சிங்கப்பூரிலிருந்து மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 1000 ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய ஆணை வழங்கியதில், 750 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஓரிரு தினங்களில் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

இந்திய தொழில் கூட்டமைப்பால் முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்பட்ட 750 ஆக்சிஜன் சிலிண்டர்களை சேலம் மாவட்டத்திற்கு 125, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 100, ஈரோடு மாவட்டத்திற்கு 100, திருவள்ளூர் மாவட்டத்திற்கு 100, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 100, வேலூர் மாவட்டத்திற்கு 75, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 75, மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு 75 என, மொத்தம் 8 மாவட்டங்களுக்கு கரோனா சிகிச்சைப் பயன்பாட்டுக்காக வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கும் நிகழ்வினை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in