

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சோளிங்கர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் ஜெயக்குமார் (59). பணியில் இருந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சோளிங்கர் அரசு மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில், தொற்று உறுதியானதால், கடந்த 22-ம் தேதி வாலாஜாவில் உள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தவருக்கு உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
இதையடுத்து, கடந்த 24-ம் தேதி ரத்தினகிரி கன்னிகாபுரத்தில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், இன்று (மே 28) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஜெயக்குமார், வேலூர் பிஷப் டேவிட் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும் உமா மகேஸ்வரி, ஜெயசித்ரா என்ற மகள்களும் வசந்தகுமார் என்ற மகனும் உள்ளனர்.