

காஞ்சிபுரத்தில் கரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை காப்பதற்காக தனியார் நிறுவனங்கள், மாணவர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
பெரும்புதூரில் இயங்கி வரும் பிரபல கார் நிறுவனம் 50 ஆக்சிஜன் ரெகுலேட்டர்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் வழங்கியது. இந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் டி.எஸ்.கிம், டிரஸ்டி ஸ்டீபன் சுதாகர், உதவி துணைத் தலைவர் புனித் ஆனந்த் ஆகியோர் இவற்றை வழங்கினர்.
இதேபோல் மற்றொரு தனியார்நிறுவனம் சார்பில் 4 ஆக்சிஜன் ரெகுலேட்டர்கள் வழங்கப்பட்டன. இந்த உதவியை இந்த நிறுவனத்தின் பொது மேலாளர் கிருஷ்ணபிரசாத் வழங்கினார். உதவி பொது மேலாளர் குமரேசன், மேலாளர் கதிரவன், சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வாலாஜாபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர் அக்ஷயபிரஜன், தன் உண்டியல் சேமிப்பு ரூ.5,645-ஐயும், வாலாஜாபாத் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவி கோபிகா தன்னுடைய படிப்பு செலவுக்காக சேமித்து வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தையும் முதல்வரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.