

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கிற்கு பிறகு கரோனா தொற்று குறைந்து வருகிறது என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா தொற்றுநோயாளிகள் குறித்து தமிழகவேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் ஆய்வுக்கூட்டம் நடந்தது.தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேலும் கூடுதலான என்ன வசதிகள் செய்யவேண்டும் என்பது குறித்து அமைச்சர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் விளங்கியம்மன் கோயில் தெரு தடுப்பு கட்டைகள் மூலம்அடைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கரோனா தொற்றாளர்களுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என்பது குறித்து மருத்துவர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது.சிகிச்சையை தீவிரப்படுத்த, தனிகவனம் செலுத்த வேண்டும். இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரோனா தொற்றாளர்கள் உள்ள இடங்களை கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறி உள்ளேன்.
தமிழக முதல்வர் பொறுப் பேற்றதிலிருந்து தொடர்ந்து கரோனா நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஊரடங்குக்கு பிறகு கரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. கடலூர் மாவட்ட அளவில் கரோனா பாதிப்பு 800- ஆக இருந்தது. தற்போது பாதிப்பு 462 உள்ளது.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இரண்டாவது ஆக்சிஜன் சேமிப்பு மையம் விரைவில் தொடங்கஉள்ளது. அதில் 250 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தி தரப்படும். மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் காட்டி வருகிறது. இதனையும் மீறி தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் , மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, சிதம்பரம் சார்- ஆட்சியர் மதுபாலன், வட்டாட்சியர் ஆனந்த், நகராட்சி ஆணையர்அஜிதா பர்வின், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் ஆகியோர் உடனிருந்தனர்.