Last Updated : 28 May, 2021 06:43 AM

 

Published : 28 May 2021 06:43 AM
Last Updated : 28 May 2021 06:43 AM

பருவம் தப்பி பெய்த மழையால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு: கையிருப்பு இல்லாததால் விலை உயர்ந்தும் பயனில்லை

தூத்துக்குடி அருகே மழைநீர் தேங்கிய உப்பளத்தில் சிறிதளவு படிந்துள்ள உப்பை வாறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி. படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

பருவம் தப்பி பெய்த மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக உப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ள போதும் உப்பு கையிருப்பில் இல்லாததால் உற்பத்தியாளர்களுக்கு எந்த பயனும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடி யாக தூத்துக்குடி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ள உப்பளங்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு ஆண்டு தோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக் கான ஆரம்பக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். பிப்ரவரி தொடக்கத்தில் உற்பத்தி தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கு உகந்த காலம் ஆகும். அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு உற்பத்தி முடிவடையும்.

மழையால் தாமதம்

ஆனால், இந்த ஆண்டு பருவம் தப்பி பெய்த தொடர் மழையால் உப்பு உற்பத்தி தாமதமாகவே தொடங்கியது. ஜனவரி மாதம் 10 நாட்கள் பெய்த மழையால் உப்பளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதனால் மார்ச் மாதம் 15-ம் தேதிக்கு பிறகே உப்பு உற்பத்தி தொடங்கியது. படிப்படி யாக உயர்ந்து உச்சக்கட்டத்தை எட்டும் நிலையில், கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது பெய்யும் மழையால் உப்பு உற்பத்தி மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை வெறும் 10 சதவீதம் அளவுக்கு அதாவது 2.5 லட்சம் டன் உப்பு மட்டுமே உற்பத்தியாகியுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் ஏஆர்ஏஎஸ்.தனபாலன் கூறியதாவது:

கடந்த சில நாட்களாக அவ்வப் போது பெய்யும் மழை மற்றும் வானிலை மாற்றம் காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் 25 முதல் 30 சதவீதம் (6.25 லட்சம் டன் முதல் 7.5 லட்சம் டன்) உப்பு உற்பத்தியாகி விடும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை 10 சதவீதம் அளவுக்கு, அதாவது 2.5 லட்சம் டன் உப்பு மட்டுமே உற்பத்தியாகியுள்ளது.

விலை உயர்வு

கடந்த ஆண்டு உற்பத்தியான சுமார் 4 லட்சம் டன் உப்பு கையிருப்பில் இருந்தது. பிப்ரவரி மாத கடைசி வரை அது போதுமானதாக இருந்தது. மார்ச் மாதத்தில் உப்பு உற்பத்தி தொடங்கியதால் ஓரளவுக்கு தேவையை பூர்த்தி செய்தோம். தற்போது உப்பளங்களில் உப்பு கையிருப்பில் இல்லை. முழுமையாக காலியாகிவிட்டது.

தட்டுப்பாடு காரணமாக உப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு டன் உப்பு ரூ.3,000 முதல் ரூ.3,500-க்கு வியாபாரிகள் கேட் கிறார்கள். சில வியாபாரிகள் ரூ.5,000 வரை கேட்பதாக கூறுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கொடுக்க எங்களிடம் உப்பு இல்லை. எனவே, விலையேற்றத்தால் உற்பத்தி யாளர்களுக்கு எந்த பயனும் இல்லை.இனி வரும் நாட்களில் வெயிலடிக்கத் தொடங்கினால் இன்னும் 10 நாட்களில் உப்பு உற்பத்தி சீராக வாய்ப்புள்ளது’’ என்றார்.

தொழிலாளர்களை தடுக்கக் கூடாது

‘‘தற்போது கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர் இரு சக்கர வாகனங்களில் செல்லக் கூடாது. நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நான்கு சக்கர வாகனங்களில் தான் பணிக்கு செல்ல வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, உப்பளங்களுக்கு இருசக்கர வாகனங்களில் பணிக்கு வரும் தொழிலாளர்களை காவல் துறையினர் தடுக்கின்றனர். உப்பளங்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் தான் தொழிலாளர்கள் வேலைக்கு வருவார்கள். அவர்களை வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் மூலம் அழைத்து வருவது இயலாத காரியம். அத்தியாவசிய உணவுப் பொருளான உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உப்பளத் தொழிலாளர்கள் இரு சக்கர வாகனங்களில் பணிக்கு வருவ தற்கு காவல்துறையினர் அனுமதிக்க வேண்டும்’’ என்றார் தனபாலன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x