

கோவையில் காட்டு யானை மிதித்து பலியானவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், பொள்ளாச்சி வனச்சரகம், சிறுகுன்றா மேல் பிரிவு பகுதியைச் சேர்ந்த ஞானமுத்து என்பவரின் மகன் ஜேம்ஸ் 19.12.2015 அன்று தனது வீட்டினருகே காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
காட்டு யானை தாக்கியதில் அகால மரணமடைந்த ஜேம்ஸ் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஜேம்ஸ் அவர்களின் குடும்பத்திற்கு வனத் துறை மூலம் மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.