Published : 27 May 2021 07:19 PM
Last Updated : 27 May 2021 07:19 PM

சிறைகளில் குழந்தைகளுடன் உள்ள 7 பெண் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக சிறைகளில் குழந்தைகளுடன் உள்ள 7 பெண் கைதிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா இரண்டாவது அலை தீவிரமாகp பரவி வரும் நிலையில் சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது, பரோல் வழங்குவது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் வைகை, முறையீடு செய்தார்.

சிறைகளில் ஆறு வயதுக்கு கீழான குழந்தைகளுடன் பெண் கைதிகளின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். சிறைகளில் காலியாக உள்ள மருத்துவர், தூய்மைப் பணியாளர்கள் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளும், இரு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களும் அறிக்கை தாக்கல் செய்தன.

தமிழகத்தின் அறிக்கையில், ஏற்கனவே சிலர் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும், குழந்தைகளுடன் உள்ள 4 தண்டனை கைதிகள் உள்ளிட்ட 7 பெண் கைதிகள் தற்போது சிறையில் உள்ளதாகவும், அவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி அறிக்கையில் அங்குள்ள மத்திய சிறையில் 156 கைதிகளில் 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் சிறைக்கு வந்துவிட்டதாகவும், 31 பேருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்திற்கு உதவும் நபராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை ஆஜராகி, கைதிகள் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அமைக்ககப்பட்டுள்ள உயர் மட்ட குழு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட வேண்டுமெனவும், புழல் சிறையில் அமைக்கப்பட்டது போல அனைத்து சிறைகளிலும் கோவிட் கேர் செண்டர்களை அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

பின்னர் தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில்,“தமிழக சிறைகளில் உள்ள 7 பெண் கைதிகளை விடுவிக்க விரைந்து முடிவு எடுக்கவேண்டும், சிறைக்கைதிகள் விடுதலை குறித்து உயர் மட்ட குழு எடுக்கும் முடிவுகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

கைதிகளை விடுதலை செய்வதில் விரைந்து நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் உறவினர்களுடன் பேச வீடியோ கால் வசதி ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவும் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 7 தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x