Last Updated : 27 May, 2021 07:11 PM

 

Published : 27 May 2021 07:11 PM
Last Updated : 27 May 2021 07:11 PM

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாளை வெங்காய மண்டி திறப்பு: வியாபாரிகள் அறிவிப்பு

திருச்சி பழைய பால் பண்ணை பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள வெங்காய மண்டி, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முன்னதாக நாளையே (மே 28) திறக்கப்படவுள்ளது.

திருச்சி பழைய பால் பண்ணை பகுதியில் உள்ள வெங்காய மண்டியில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, கரோனா மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், மே 24-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை மண்டியை மூடுவதாக வியாபாரிகள் அறிவித்தனர். தொடர்ந்து, வெங்காய மண்டியும் மூடப்பட்டது. இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மே 28-ம் தேதியே வெங்காய மண்டி திறக்கப்படவுள்ளதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக திருச்சி வெங்காயத் தரகு மண்டி வர்த்தகர் சங்கச் செயலாளர் ஏ.தங்கராஜ் 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறும்போது, ''கரோனா பரவலைத் தடுக்கவே தற்காலிகமாக வெங்காய மண்டி மூடப்பட்டது. இதுதொடர்பாக நாங்கள் முன்கூட்டியே தகவல் தெரிவித்தாலும், விவசாயிகள் பலரும் ஏற்கெனவே வெங்காயத்தை அறுவடை செய்துவிட்டனர்.

இந்த நிலையில், அறுவடை செய்த வெங்காயத்தைப் பாதுகாக்க முடியாமல் அவதிப்படுவதாகவும், பல்வேறு பகுதிகளிலும் மழை காரணமாக வெங்காயம் அழுகி வருவதாகவும் விவசாயிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மே 28-ம் தேதி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை வெங்காய மண்டியில் விற்பனை நடைபெறும். 200 டன் சின்ன வெங்காயம், 400 டன் பெரிய வெங்காயம் மண்டிக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். மே 29-ல் விற்பனை இருக்காது. அதைத் தொடர்ந்து, மே 30-ம் தேதி முதல் வெங்காய மண்டி தினமும் செயல்படும்.

மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு மட்டுமே வெங்காயம் விற்பனை செய்யப்படும். மண்டி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

வியாபாரிகள், தொழிலாளர்கள் ஆகியோர் முகக்கவசம் அணிந்திருக்கவும், கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x