கரோனா தனிமைப்படுத்துதல் இலவச முகாம்: பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் சென்னையில் திறப்பு

கரோனா தனிமைப்படுத்துதல் இலவச முகாம் திறப்பு.
கரோனா தனிமைப்படுத்துதல் இலவச முகாம் திறப்பு.
Updated on
2 min read

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் கரோனா தனிமைப்படுத்துதல் இலவச முகாம் திறக்கப்பட்டது.

இது தொடர்பாக, பாப்புலர் ஃப்ரண்ட் கோவிட் மீட்பு மையத்தின் மாநிலப் பொறுப்பாளர் முஹமது ரபீக் ராஜா இன்று (மே 27) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதையொட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இலவசமாக கரோனா மீட்பு உதவி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் விதமாக இலவசமாகத் தனிமைப்படுத்துதல் முகாம் இன்று சென்னை மண்ணடியில் தொடங்கப்பட்டது. 40 படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், 24 மணி நேரம் ஷிப்ட் முறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் கொண்டு இம்முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு பரக்கத் மேன்சன் உரிமையாளர் பரக்கத் சுல்தான், மருத்துவர்கள் ஹரிஸ், சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அச.உமர் பாரூக், செயலாளர் அமீர் ஹம்சா, வர்த்தக அணி மாநிலத் தலைவர் முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி இலவசத் தனிமைப்படுத்துதல் முகாமைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது, 'தற்போது கரோனாவின் இரண்டாவது அலையில் நமது நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் தமிழகம் முழுவதும் மக்களுக்கான துயர் துடைப்புப் பணிகளையும், உதவி மையங்களையும் ஏற்படுத்தி, அதன் மூலம் உதவிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. நோயாளிகளுக்குப் படுக்கையறை வசதிகளும், தேவையுடையவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவைகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மிக முக்கியமாக கரோனா இரண்டாவது அலையில் இறந்தவர்களை அவரவர் மத வழிகாட்டுதல்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மக்களின் அவசிய சூழல் கருதி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில், மருத்துவ வசதி மற்றும் படுக்கைகள் கொண்ட 'கரோனா தனிமைப்படுத்துதல் இலவச முகாம்' ( Free Covid Isolation ward) இன்று தொடங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவையின் அடிப்படையில் கோவிட் தொற்றுக்கு எதிரான எங்களது மீட்புப் பணிகளை விரிவுபடுத்த இருக்கிறோம்' என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநில மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரசாக், வடசென்னை மாவட்டத் தலைவர் பக்கீர் முஹம்மது, செயலாளர் அப்துர் ரஹ்மான் , தென்சென்னை மாவட்டச் செயலாளர் அகமது அலி, எஸ்டிபிஐ கட்சி வடசென்னை மாவட்டத் தலைவர் முஹம்மது ரசீது, மத்திய சென்னை மாவட்டப் பொதுச் செயலாளர் எஸ்.வி.ராஜா, செயலாளர் முகமது இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்".

இவ்வாறு பாப்புலர் ஃப்ரண்ட் கோவிட் மீட்பு மையத்தின் மாநிலப் பொறுப்பாளர் முஹமது ரபீக் ராஜா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in