Last Updated : 27 May, 2021 04:22 PM

 

Published : 27 May 2021 04:22 PM
Last Updated : 27 May 2021 04:22 PM

காரைக்காலில் காவல்துறை சார்பில் உளவியல் ஆலோசனை: தற்கொலைகளைத் தடுக்க 'வெளிச்சம்' திட்டம் தொடக்கம்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மக்கள் உளவியல் ரீதியான ஆலோசனைகளை பெறும் வகையில் காவல் துறை சார்பில் “வெளிச்சம்” என்ற திட்டம் இன்று (மே 27) தொடங்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

”காரைக்கால் மாவட்டத்தில் தேசிய சராசரியை விட தற்கொலை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு சுமார் 100 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. நிகழாண்டு இதுவரை 35 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், குடும்பப் பிரச்சினை, உடல் மற்றும் மன நலன் சார்ந்த பிரச்சினை, கரோனா தொற்று மற்றும் அது சார்ந்த பாதிப்புகள் உள்ளிட்ட பலவேறு காரணங்களால் மன அழுத்தம், மன உளைச்சலில் உள்ள மக்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கவும், தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதை தடுக்கவும், அவர்களின் மன அழுத்தததைக் குறைத்து ஆற்றுப்படுத்தும் வகையிலும் வெளிச்சம் என்ற இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து வயதினரும், 9487565699, 9487606099 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொண்டு உளவியல் ஆலோசனைகளை பெறலாம். 24 மணி நேரமும் இது செயல்படும். உளவியல் ஆலோசனை பெறுவோரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களின் ரசியம் பாதுகாக்கப்படும். உளவியல் மற்றும் சமூகப் பணித்துறையில் அனுபவம் பெற்ற பேராசிரியர்கள் 2 பேர் உளவியல் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x