2015-ல் பெய்த பருவமழை வழக்கத்தைவிட 53% அதிகம்: ரமணன்

2015-ல் பெய்த பருவமழை வழக்கத்தைவிட 53% அதிகம்: ரமணன்
Updated on
1 min read

இந்த ஆண்டு வழக்கத்தைவிட வடகிழக்கு பருவமழை 53% அதிகமாக பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பெய்யும்.

வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 44 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகும். இந்த ஆண்டு 68 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தைவிட வடகிழக்கு பருவமழை 53% அதிகமாக பெய்துள்ளது.

கடந்த 2013-ல், வடகிழக்கு பருவமழை காலத்தில் 33% மட்டுமே மழை பெய்தது. 2014-ல் அக்டோபர் மாதம் கனமழை பெய்தாலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை பெய்யவில்லை. இந்த ஆண்டு (2015) கடந்த 2005-ம் ஆண்டு பெய்ததுபோல் தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை சிறப்பாக பெய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 183% மழை பெய்துள்ளது. இந்த மாவட்டத்தில் அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் 64 செ.மீ மட்டுமே மழை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் 181.5 செ.மீ. மழை பெய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 146 செ.மீ. மழை பெய்துள்ளது. வழக்கமாக வடகிழக்கு பருவமழையின்போது இம்மாவட்டத்தில் 59 செ.மீ மட்டுமே மழை பெய்யும்.

சென்னையில் வழக்கமாக 79 செ.மீ. அளவு வடகிழக்கு பருவமழை பெய்யும் ஆனால் இந்த ஆண்டு 160 செ.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 104% அதிகமாகும்.

அடுத்த 4 முதல் 5 தினங்களுக்கு தொடர்ச்சியாக தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை இல்லாமல் இருந்தால் வடகிழக்கு பருவமழை காலம் முடிந்துவிட்டதாக கருதலாம்" என்றார்.

வடகிழக்கு பருவமழையின்போது தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்ததற்கு எல்நினோவும் ஒரு காரணி என ரமணன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in