Last Updated : 27 May, 2021 03:10 AM

 

Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

மேட்டூர் அணை திறப்புக்கான அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டம் துறையுண்டார்கோட்டை கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்று நீரைக் கொண்டு தொடங்கி உள்ள குறுவை சாகுபடி பணிகள்.

சென்னை

கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்காகத் திறக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை மே 18-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான நாளில் அணையில் சுமார் 65 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது. அதேபோல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு அணையை திறக்கும் வகையில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 97 அடியாக இருந்தது.

அணையில் சுமார் 62 டி.எம்.சி. நீர் இருப்பில் உள்ளது. ஆகவே, மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக வெளியிட வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

அணை திறக்கப்படும் அறிவிப்பை முன் கூட்டியே வெளியிட வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீரைக் கொண்டு நெல் நாற்றங்கால் தயார் செய்யும் பணிகளை விவசாயிகள் முன்கூட்டியே நம்பிக்கையுடன் தொடங்குவார்கள். மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் தஞ்சாவூரில் கடந்த மே 16-ம் தேதி நடைபெற்றது. எனினும் இந்தக் கூட்டம் நடைபெற்று 10 நாட்களுக்குப் பிறகும் அணை திறப்பு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் ஒரு பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். ஆழ்துளை கிணறுகளின் உதவியால் இதுவரை 68,500 ஏக்கரில் சாகுபடி செய்வதற்கு நாற்று விடப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் சுமார் 56 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்பட்டால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கருக்கும் மேல் குறுவை நெல் சாகுபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் இருப்பில் உள்ள நீர், 50 நாட்கள் பாசனத்துக்கு போதுமானது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய 9.19 டி.எம்.சி., ஜூலை மாத பங்கீடு 31.24 டி.எம்.சி., ஆகஸ்ட் மாதத்துக்கான 45.95 டி.எம்.சி. நீரை கேட்டுப் பெற வேண்டும். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையும் இயல்பான அளவில் பெய்யக் கூடும் என வானிலை கணிப்புகள் கூறுகின்றன. இதன் காரணமாக, வரும் சாகுபடி ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்ற நம்பிக்கை நிலவுகிறது.

குறுவை பணிகளை முன்கூட்டியே தொடங்கினால்தான், வடகிழக்கு பருவமழையால் பாதிக்காத வகையில் அறுவடைப் பணிகளை விவசாயிகளால் மேற்கொள்ள முடியும். இந்நிலையில், மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆகவே, மேட்டூர் அணை திறப்புக்கான அறிவிப்பு இன்னும் ஓரிருநாட்களில் வெளியாகக் கூடும் என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x