Published : 26 May 2021 10:43 PM
Last Updated : 26 May 2021 10:43 PM

திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; பச்சிளங் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்பு: உதயநிதி நேரில் ஆய்வு

சென்னை

திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் பிரசவ வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்த பச்சிளங் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். உடனடியாகத் தீ அணைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து அமைச்சர் சேகர்பாபுவும், தொகுதி எம்எல்ஏ உதயநிதியும் ஆய்வு செய்தனர்.

சென்னையின் மிகப்பெரிய பொது மருத்துவமனைகளில் ஒன்றும், பழமையான மருத்துவமனையும், மகப்பேறு மருத்துவமனையுமான கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது. இங்கு பிரசவத்துக்காக ஆந்திராவிலிருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவர். குழந்தைகள் மருத்துவமனையாகவும், பொது மருத்துவமனையாகவும் கஸ்தூரிபாய் மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது.

எந்நேரமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், அவர்களைப் பார்க்க வரும் பொதுமக்கள் என மருத்துவமனை பரபரப்பாகவே இருக்கும். மருத்துவமனைக்கு பெல்ஸ் சாலை மற்றும் விக்டோரியா ஹாஸ்டல் இருக்கும் பகுதி என இரண்டு பகுதிகளிலும் வாயில்கள் உள்ளன. இங்கு இன்று இரவு சுமார் 8.30 மணி அளவில் இரண்டாம் தளத்தில் குழந்தைகள் வைக்கப்பட்டிருக்கும் இன்குபேட்டர் அறையில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அங்கிருந்து குழந்தைகளை மாற்று அறைக்கு அவசர அவசரமாக மாற்றினர். இந்த அறையில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் சிகிச்சையில் இருந்தனர். குறைப் பிரசவம் ஆன குழந்தைகள் தாயின் கருவறையில் இருக்கும் நிலையில் வைக்கப்படும் இன்குபேட்டர் கருவியில் 2 குழந்தைகள் இருந்தனர். மொத்தம் 36 குழந்தைகள் அறையில் இருந்தனர்.

தீ விபத்து ஏற்பட்டு அந்தப் புகையினால் சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டு குழந்தைகள் உயிருக்கே ஆபத்து எனும் சூழ்நிலையில் உடனடியாக செவிலியர்களும், மருத்துவர்களும் துரிதமாகச் செயல்பட்டு குழந்தைகளை வேறு அறைக்கு மாற்றினர். உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வாலாஜா சாலையில் இருந்து தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைத்தது.

இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் பெல்ஸ் சாலையில் நோயாளிகளின் உறவினர்கள் பரபரப்புடன் அலைந்தனர். தீ அணைக்கப்பட்டதாலும், குழந்தைகள் உடனடியாகப் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாலும் அனைவரும் நிம்மதி அடைந்தனர். 36 பச்சிளங் குழந்தைகள் மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டு அமைச்சர் சேகர்பாபுவும், தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

சம்பவம் நடந்த அறைகளைப் பார்வையிட்டனர். தீ விபத்து ஏற்பட்டது குறித்து ஊழியர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். விபத்து குறித்து அறிந்ததும் செவிலியர்கள், ஊழியர்கள் தக்க நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால் நல்வாய்ப்பாக உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x