Last Updated : 26 May, 2021 07:24 PM

 

Published : 26 May 2021 07:24 PM
Last Updated : 26 May 2021 07:24 PM

தொடர் புகார்: காரைக்குடி அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகளைத் திறந்து வைத்த அமைச்சர் பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லையெனத் தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, உடனடியாக 300 படுக்கைகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கரோனா வார்டில் 116 ஆக்சிஜன் வசதி படுக்கைகள் உள்ளிட்ட 120 படுக்கைகள் இருந்தன. மேலும் ரூ.10.50 கோடியில் கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு புதிய கட்டிடத்தில் 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி நடவடிக்கை எடுத்தார். ஆனால், பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதால், கரோனா அறிகுறியுடன் வருவோருக்கு வராண்டாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் படுக்கை இல்லையென மருத்துவர்கள் கைவிரித்தனர். இதுபோன்ற தொடர் புகார்களையடுத்து, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தில் இரவு, பகலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 300 படுக்கைகள் தயாராகின.

இந்நிலையில் இன்று அந்த படுக்கை வசதிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார். இதற்கு மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலை வகித்தார். மாங்குடி எம்எல்ஏ, மருத்துவ இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், தலைமை மருத்துவர் தர்மர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''காரைக்குடி அரசு மருத்துவமனையில் புதிதாகத் திறக்கப்பட்ட 300 படுக்கைகளில் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி உள்ளது. மேலும் மாவட்டத்தில் 2,300 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 1,300 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடியவை. தனியார் மருத்துவமனைகளில் 250 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x