Last Updated : 26 May, 2021 06:03 PM

 

Published : 26 May 2021 06:03 PM
Last Updated : 26 May 2021 06:03 PM

இதயத்தைச் சுற்றி இருமுறை நீர் தேக்கமடைந்த கல்லூரி மாணவருக்கு 'பெரிகார்டியக்டமி' சிகிச்சை செய்து காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளைஞர்களுடன் மருத்துவமனையின் டீன் நிர்மலா, மருத்துவக் குழுவினர்.

கோவை

இருமுறை இதயத்தைச்சுற்றி நீர் தேக்கமடைந்த கல்லூரி மாணவருக்கு அவசர 'பெரிகார்டியக்டமி' அறுவை சிகிச்சை செய்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இது தொடர்பாக, மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:

"இதயத்தைச் சுற்றி பெரிகார்டியம் என்ற மெல்லிய உறை போன்ற ஒரு அமைப்பு உள்ளது. சாதாரணமாக இதற்குள் 20 முதல் 40 மி.லி. நீர் இருக்கும். இதற்குள் 500 முதல் 1,000 மி.லி. நீர் தேக்கமடைந்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இதயம் செயலிழக்க வாய்ப்புள்ளது.

காசநோய், சிறுநீரகக் கோளாறு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படும். அவ்வாறு பாதிப்பு ஏற்படாமல் இருக்க 'பெரிகார்டியோசென்டசிஸ்' எனும் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த சிகிச்சையின்போது இதயத்தைச் சுற்றி இருக்கும் மெல்லிய உறை போன்ற பகுதியில் துளையிட்டு, இதயத்தைச் சுற்றி இருக்கும் நீர் வெளியேற்றப்படும்.

சூர்யாகுமார் (23) என்ற கல்லூரி மாணவர் கடந்த மார்ச் மாதம் அதீத மூச்சுத் திணறலுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு இதயத்தைச் சுற்றி நீர் தேக்கமடைந்து இருந்தது கண்டறியப்பட்டது.

இதயவியல் துறை தலைவர் டி.முனுசாமி, ஜெ.நம்பிராஜன் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர், உடனடியாக பெரிகார்டியோசென்டசிஸ் சிகிச்சை அளித்து 2 லிட்டர் நீரை வெளியேற்றினர். சிகிச்சை முடிந்து இளைஞர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மீண்டும் பெரிகார்டியோசென்டசிஸ் செய்து நீரை மருத்துவர்கள் வெளியேற்றினர். பின்னர், அந்த இளைஞருக்கு நாளுக்கு நாள் இதயத்தைச் சுற்றி நீர் அதிகமாகச் சேர்வது தெரியவந்தது.

இதையடுத்து, இதய அறுவை சிகிச்சைத் துறை தலைவர் சீனிவாசன் ஆலோசனையைப் பெற்று, உடனடியாக 'பெரிகார்டியக்டமி' என்ற அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இதயத்தைச் சுற்றியுள்ள மெல்லிய உறை போன்ற அமைப்பின் ஒரு பகுதி வெட்டி அகற்றப்பட்டது. இதன் மூலம் இனிமேல் இளைஞரின் இதயத்தைச் சுற்றி நீர் சேராது".

இவ்வாறு மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x