Published : 26 May 2021 05:45 PM
Last Updated : 26 May 2021 05:45 PM

கார் ஓட்டுநர் தற்கொலை விவகாரம்: மனித உரிமை ஆணைய தண்டனையை ரத்து செய்யக் கோரி போக்குவரத்து போலீஸார் வழக்கு

வாடகை கார் ஓட்டுநர் தற்கொலை சம்பவத்தில், தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி போக்குவரத்து போலீஸார் தொடர்ந்த வழக்கில், மனித உரிமை ஆணையமும், தமிழக அரசும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை போரூர் டி.எல்.எஃப்.பில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வாடகை கார் ஓட்டிய ராஜேஷ், 2019ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி திருமங்கலத்திலிருந்து அந்நிறுவனத்தின் ஊழியர்களை அழைத்து வருவதற்காக காலை 8 மணியளவில் சாலையோரத்தில் தனது காரை நிறுத்தியிருந்தார். அப்போது அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள் இருவர், காரை எடுக்கச் சொல்லி ஓட்டுநர் ராஜேஷை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ராஜேஷ் காணொலியில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கூறிப் பதிவு செய்து மறைமலை நகர் மற்றும் சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் படுத்துத் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அறிந்த கால் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது.

சம்பந்தப்பட்ட போலீஸார் மட்டுமல்ல, பெரும்பாலான போலீஸார் தங்களை அவமானப்படுத்தும் வண்ணம் ஆபாச வார்த்தைகளில் திட்டுகின்றனர் என ஓட்டுநர்கள் தெரிவித்தனர். ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தற்கொலை செய்துகொண்ட ஓட்டுநர் ராஜேஷ் தனது தற்கொலை முடிவிற்கு இரு போக்குவரத்துக் காவலர்களே காரணமென தனது மொபைலில் வீடியோ பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பாக வார இதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதற்கிடையில் ராஜேஷின் சகோதரர் ராம்குமாரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

விசாரணைக்குப் பிறகு சம்பவ இடத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளராக இருந்து ஓய்வுபெற்ற தங்கம் மற்றும் தலைமைக் காவலர் பெருமாள் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், ராஜேஷின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் தங்கமும், பணியிலிருக்கும் பெருமாளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்கள் மனுவில், “சம்பவத்தன்று காலை திருமங்கலம் பகுதியில் இருசக்கர வாகன விபத்து நடந்தது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராஜேஷ் பதிவு செய்த வீடியோவில் கூட போக்குவரத்துக் காவலர்கள் என்றுதான் கூறியுள்ளாரே தவிர, யாரையும் குறிப்பிடவில்லை.

மனித உரிமை ஆணையம் விசாரித்தபோது, சம்பவம் நடந்தபோது ராஜேஷின் காரில் இருந்த தனியார் நிறுவனப் பெண் ஊழியரிடம் விசாரிக்கவில்லை, நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை. அதனால் தற்கொலை நிகழவில்லை. அதனால் மனித உரிமை ஆணையம் எங்கள் மீது விதித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை அந்த உத்தரவிற்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியுள்ளனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.சரவணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரின் வழக்கு குறித்து 3 வாரத்தில் மாநில மனித உரிமை ஆணையமும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x