Last Updated : 26 May, 2021 04:35 PM

 

Published : 26 May 2021 04:35 PM
Last Updated : 26 May 2021 04:35 PM

கரோனா தொற்றால் தலைமை ஆசிரியர் உயிரிழப்பு

தலைமை ஆசிரியர் நரேந்திர குமார்.

வேலூர்

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட காட்பாடி அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் நரேந்திர குமார் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அதேபோல, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த குடியாத்தம் செவிலியரின் தாயாரும் பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கம்மவார் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நரேந்திர குமார் (56). இவர், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக, அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நரேந்திர குமாரின் உடல்நிலை இன்று (மே 26) காலை மோசமடைந்தது.

இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்தனர். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் மறைவுக்கு அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் சங்கத்தினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பெண் செவிலியராகப் பணியாற்றி வந்த பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த எழிலரசி (40) என்பவர், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். எழிலரசியின் குடும்பத்தாரும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதில், அவரது தாயார் பாப்பம்மாள் (76) என்பவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் நேற்றிரவு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் கரோனா விதிகளுக்கு உட்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x