

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள உதவி எண் மற்றும் காணொலி உதவி எண் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். வெளியில் வர இயலாதவர்களுக்கு வீடுதேடி தடுப்பூசி என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கும் வகையில் தடுப்பூசி சிறப்பு முகாம்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டார். அதனடிப்படையில், முதல்வரால் மாற்றுத்திறனாளிகளுக்கான கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் மே.22 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கும் வகையில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் மாநகராட்சியின் அனைத்து மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தி, வரிசையில் காத்திருக்காமல், தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் விரைந்து தடுப்பூசி செலுத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111 என்ற உதவி எண் மற்றும் 97007 99993 என்ற காணொலி உதவி எண்களின் வாயிலாக பதிவு செய்யலாம். இந்த உதவி எண்கள் மூலம் பதிவு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையில் தற்காலிக தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்ட நபர்களுக்கு அவர்களின் வீடு அல்லது மிக அருகாமையில் சென்று தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உதவி எண்களின் வாயிலாக 169 நபர்கள் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட நாள் முதல் நேற்று (25.05.2021) வரை 118 மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் 90 நபர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலமாகவும், 28 நபர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.