Last Updated : 26 May, 2021 02:32 PM

 

Published : 26 May 2021 02:32 PM
Last Updated : 26 May 2021 02:32 PM

புதுவையில் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்பு: எம்எல்ஏக்களுடன் நியமன எம்எல்ஏக்களும் பதவிப் பிரமாணம்

ராஜ்நிவாஸில் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக தேர்தல் அறிவிக்கப்பட்டு சபாநாயகர் தேர்வாகவுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 2-ம் தேதி வெளியானது. வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்குத் தேர்தல் துறை சான்றிதழ்களை வழங்கியது. அதே நேரத்தில் ரங்கசாமி முதல்வராக கடந்த 7-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளார்.

இதையடுத்து தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்பு விழா இன்று நடந்தது. ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணனுக்குத் தமிழிசை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பெயரால் லட்சுமி நாராயணன் பதவியேற்றார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி, லட்சுமி நாராயணன் குடும்பத்தினர், ராஜ்பவன் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தேர்வான மற்றும் நியமன எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம்

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அறையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடந்தது. வழக்கமாக சட்டப்பேரவையில்தான் எம்எல்ஏக்கள் பதவியேற்பு நடைபெறும். கரோனா பரவல் காரணமாக சபாநாயகர் அறையில் எளிய முறையில் விழா நடந்தது. முதல் நபராக முதல்வர் ரங்கசாமி எம்எல்ஏவாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவருக்குத் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து எம்எல்ஏக்கள் தனித்தனியே சபாநாயகர் அறைக்கு வந்து எம்எல்ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, திமுக, சுயேச்சை எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். எம்எல்ஏக்கள் பதவியேற்கும்போது அவர்களின் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

நியமன எம்எல்ஏக்கள் மூவர் நியமனம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்யக் கூடாது என்று சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களோடு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்களும் பதவியேற்றுக்கொண்டனர். எம்எல்ஏக்கள் பதவியேற்பையொட்டி சட்டப்பேரவை வளாகத்துக்குள் வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பதவியேற்பு விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து சபாநாயகர் லட்சுமி நாராயணன் கூறுகையில், "எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிறைவடைந்துள்ளது. முதல்வர் ரங்கசாமியும், அரசும் தேர்தல் தேதியை அறிவித்து சபாநாயகர் நியமனம் நடைபெறும். சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக இத்தேர்வு அனைத்தும் முடிந்துவிடும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x