Published : 26 May 2021 12:19 PM
Last Updated : 26 May 2021 12:19 PM

யாஸ் புயலால் வேம்பாரில் பலத்த காற்று: ரூ.40 லட்சம் மதிப்பிலான விசைப்படகு சேதம்

கோவில்பட்டி

யாஸ் புயலால் வேம்பாரில் பலத்த காற்று வீசி வருவதால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகின் நங்கூரம் அறுந்து தூண்டில் பாலத்தில் மோதி உடைந்தது.

மீன்பிடித் தடைக் காலம் அமலில் உள்ளதால் தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும், கரோனா 2-வது அலையைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லாமல் உள்ளனர்.

இதற்கிடையே ஊரடங்கு காரணமாக உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டதாலும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளத் தொழிலாளர்கள் வர முடியாததாலும் பெரும்பாலான விசைப்படகுகள் கடலிலேயே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், யாஸ் புயல் காரணமாக மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வேம்பார், கீழ வைப்பார், தருவைகுளம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாகப் பலத்த காற்று வீசி வருகிறது. நேற்று இரவு வீசிய பலத்த காற்றில் வேம்பார் கடலில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு ஒன்று நங்கூரம் அறுந்து கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு தூண்டில் பாலத்தின் கற்களில் மோதியது. இதனால் படகு உடைந்து சேதமடைந்தது.

இந்தப் படகு ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த அசோகன் என்பவருக்குச் சொந்தமானது. இதுகுறித்த தகவல் அவருக்கு நேற்றே தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு காரணமாக இன்று காலைதான் அவர் வேம்பார் வந்தார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் கடலில் உடைந்து விழுந்த பாகங்களைக் கரைக்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். உடைந்து சேதம் அடைந்த விசைப்படகின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x