Last Updated : 11 Mar, 2014 12:00 AM

 

Published : 11 Mar 2014 12:00 AM
Last Updated : 11 Mar 2014 12:00 AM

தேர்தல் பார்வையாளராக 1500 ஐஏஎஸ்கள் தேர்வு: தமிழகத்தில் இருந்து 40 பேர்; டெல்லியில் பயிற்சி

தமிழகத்தில் இருந்து 40 ஐஏஎஸ் அதிகாரிகள் வெளி மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களாக செல்கின்றனர். இவ்வாறு நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1,500 தேர்தல் பார்வையாளர்களுக்கு டெல்லியில் வரும் 15ம் தேதி பயிற்சி வகுப்பு நடக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலை நேர்மையாக, நியாயமாக, அமைதியுடன் நடத்துவதற்கு மத்திய தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, அனைத்து தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமார் 1,500 தேர்தல் பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் பணிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த வகுப்பு டெல்லியில் வரும் 15-ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் தமிழக தேர்தல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

நாடு முழுவதும் 1985 - 2004 இடையே ஐஏஎஸ் பணியில் சேர்ந்தவர்கள் பட்டியலை அனுப்புமாறு கேட்டு, அதில் இருந்து பார்வையாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 40 பேர் வெளி மாநிலங்களுக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஒரு தொகுதிக்கு ஒரு பொது பார்வையாளர் வீதம் நாடு முழுவதும் 543 தேர்தல் பார்வையாளர்களும் (அனைவரும் ஐஏஎஸ்), நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒருவர் என நாடு முழுவதும் ஆயிரத்துக் கும் மேற்பட்ட தேர்தல் செலவுக் கணக்குப் பார்வையாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் டெல்லியில் உள்ள மத்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வரும் 15-ம் தேதி பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. அது முடிந்த பிறகு, அந்தந்த தொகுதிகளுக்கு அவர்கள் புறப்பட்டுச் செல்வார்கள்.

இவ்வாறு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x