Published : 22 Dec 2015 08:19 AM
Last Updated : 22 Dec 2015 08:19 AM

தமிழ்நாடு அரசு கேபிள் டிவிக்கான சிக்னலை துண்டிக்க தடை கோரி வழக்கு: ஜன. 6 வரை தற்போதைய நிலையே நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் வழங்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவிக்கான சிக்னலை துண்டிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 31 மாவட்டங்களில் கேபிள் டிவி ஒளிபரப்பு சேவையை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அளித்து வருகிறது. மாதம் ரூ.70-க்கு 100 சேனல்கள் வழங்கப்படுகின்றன. மொத்தம் 70 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான நடவடிக்கையை அரசு கேபிள் டிவி நிறுவனம் எடுத்து வருகிறது. அதற்கான உரிமம் கோரி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் விண்ணப் பிக்கப்பட்டது. செட்டாப் பாக்ஸ் வாங்குவதற்கான நடவடிக்கை களும் எடுக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் கோரிய விண்ணப்பம் நிலுவை யிலேயே உள்ளது. விண்ணப்பத் தைப் பரிசீலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் இதுவரை 326 விண்ணப்பதாரர் களுக்கு தற்காலிக உரிமம் வழங்கியுள்ளது. எங்களுக்குப் பிறகு விண்ணப்பித்தவர்களுக்கு கூட உரிமம் வழங்கப்பட்டுவிட்டது. எங்களுக்கு தற்காலிக உரிமம்கூட வழங்காமல் பாகுபாடு காட்டப் படுகிறது.

டிசம்பர் 31-ம் தேதிக்குள் டிஜிட்டல் ஒளிபரப்புக்குள் வராத அரசு கேபிள் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என மத்திய தகவல் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்புக்கான தற்காலிக உரி மம்கூட வழங்காத நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவிக்கான சிக்னலை துண்டிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும். தற்காலிக உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி, சிறப்பு அரசு வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகினர். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் சீனிவாசன் ஆகியோர், அரசிடம் கேட்டு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று கோரினர். இதையடுத்து விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x